புதுச்சேரி - பெங்களூரு இடையேயான விமானப் பயணத்துக்கு பயணச்சீட்டை முன்பதிவு செய்வது வியாழக்கிழமை தொடங்கியது.
கடந்த 2013-ஆம் ஆண்டு ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும், 2015-ஆம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனமும் புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு விமான சேவையைத் தொடங்கின. ஆனால், பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால், சேவையை நிறுத்திவிட்டன. இதனிடையே, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஹைதராபாத்துக்கு விமான சேவையைத் தொடங்கியது.
இதற்கு பயணிகளிடம் வரவேற்பு கிடைத்ததால், ஹைதராபாத்தைத் தொடர்ந்து பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் மீண்டும் பெங்களூரூக்கு விமான சேவை தொடங்கப்படும் என ஸ்பைஸ் ஜெட்
நிறுவனம் அறிவித்தது.
அதன்படி, புதுச்சேரி - பெங்களூரு விமானப் பயணத்துக்கான பயணச்சீட்டு முன்பதிவை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் இருந்து பெங்களூருவுக்குச் செல்ல
ரூ. 1,584 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவிலிருந்து காலை 9.40 மணிக்கு புறப்படும் விமானம் புதுச்சேரிக்கு காலை 10.30-க்கு வந்தடையும். தொடர்ந்து, புதுச்சேரியிலிருந்து காலை 10.50 மணிக்கு புறப்படும் விமானம் நண்பகல் 12.10-க்கு பெங்களூரூ சென்றடையும்.