வில்லியனூரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுவை வில்லியனூர் அருகே உள்ள கரையான்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் தமிழ் (எ) இளவரசன் (24). எம்.காம்., பட்டதாரியான இவர் பால் வியாபாரம் செய்து வந்தார்.
கணுவாப்பேட்டை கூட்டுறவு சங்கத்தில் பால் ஊற்றுவதற்காக சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ஐயனார் (24), மணிகண்டன் (23), சந்துரு (22) மற்றும் 3 சிறுவர்கள் என மொத்தம் 6 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது:
கொலையான தமிழ் என்ற இளவரசன் கடந்த ஆண்டு ஊரில் பொது இடத்தில் மது அருந்திக்கொண்டிருந்தபோது, ஐயனாரையும் அவரது நண்பர்களையும் அடித்து முட்டி போட வைத்ததாகவும், இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை நடந்துள்ளது.
அவர்களுக்கு ஆயுதம் வழங்கிய கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த பாண்டியன், கொலைக்கு திட்டமிட்ட அர்ஜூனன் என்பவரையும் தேடி வருவதாக தெரிவித்தனர்.