புதுச்சேரி மூலக்குளம் முதல் உளவாய்க்கால் வரை சாலை விரிவாக்கம் செய்ய ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒரு வாரத்தில் நோட்டீஸ் வழங்கப்படும் என்று பொதுப்பணி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் ஊசுடு தொகுதி உறுப்பினர் தீப்பாய்ந்தான் பேசும்போது,
மூலக்குளம் முதல் உளவாய்க்கால் வரை உள்ள சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி நிகழ் நிதியாண்டில் எடுத்துக் கொள்ளப்படுமா என்றார்.
அமைச்சர் நமச்சிவாயம்: அந்தப் பகுதி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துவிட்டது. அந்தச் சாலையை அகலப்படுத்த ஹட்கோவிடம் நிதி கேட்டுள்ளோம். சில பகுதி உழவர்கரை தொகுதியிலும், சில பகுதிகள் ஊசுடு தொகுதியிலும் வருகின்றன. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது உறுப்பினர்களின் தலையீடு இருக்கக்கூடாது.
தீப்பாய்ந்தான், எம்.என்.ஆர்.பாலன்: குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் தந்தால் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதை எதிர்க்க மாட்டோம்.
அமைச்சர் நமச்சிவாயம்: மனைப்பட்டா வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், அங்கு குடியிருந்தவர்கள் தங்களது வீடுகளில் உறவினர்களை குடியமர்த்தி உள்ளனர். இந்த வாரத்திலேயே வெளியேறச் செய்வதற்கான நோட்டீஸ் அனுப்பப்படும்.
எம்.என்.ஆர்.பாலன்: சிலருக்கு லாம்பர்ட் சரவணன் நகரில் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் குடிநீர் வசதி செய்யாததால் அவர்களால் குடியேற முடியவில்லை.
லட்சுமிநாராயணன் (காங்.): அடுக்கு மாடி கட்டடங்களின் ஆயுள்காலமே 25 ஆண்டுகள்தான். அந்தக் குடியிருப்புகள் கட்டி 6 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்னும் பயனாளிகளிடம் ஒப்படைக்கவில்லை.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் அவற்றை ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.