பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ. 12 லட்சத்துக்கான நிதியை முதல்வர் வே.நாராயணசாமி வெள்ளிக்கிழமை வழங்கினார்.
புதுவை அரசின் ஆதிதிராவிடர் நலத் துறை மூலம் நெல்லித்தோப்பு தொகுதிக்கு உள்பட்ட பயனாளிகளுக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தினுடன் இணைந்த ராஜீவ் காந்தி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 5 நபர்களுக்கு முதல் தவணைத் தொகையும், ஒரு நபருக்கு இரண்டாம் தவணைத் தொகையும், மூன்று நபர்களுக்கு மூன்றாம் தவணைத் தொகையும் மொத்தம் என ரூ. 12 லட்சத்துக்கான காசோலைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் அலுவலக அறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தொகையை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.
நிகழ்ச்சியின் போது சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி, தில்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குநர் ரகுநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.