புதுவை பிப்டிக் நிறுவனத்தின் வாராக் கடன் தொகை ரூ.106 கோடியை வசூலிக்க உடனடி நடவடிக்கை எடுக்க துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் நாராயணசாமியை ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ரகுபதி வெளியிட்ட அறிக்கை:
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்படி, பிப்டிக்குக்கு ரூ. 106.82 கோடி வாராக் கடன் உள்ளது. சிறுதொழில் கடன் ரூ. 1.87 கோடியும், வாகனக் கடன் ரூ. 6.4 கோடியும், கல்விக் கடன் ரூ. 1.32 கோடியும், அரசு சார்ந்த தொழிற்சாலைக் கடன் ரூ. 97.2 கோடியும் வாராக் கடனில் உள்ளன. குறிப்பாக, புதுச்சேரி பஞ்சாலைக்கழகம் ரூ. 54.3 கோடியும், கூட்டுறவு சர்க்கரை ஆலை ரூ. 21.94 கோடியும், ஜெயப்பிரகாஷ் நாராயணன் நூற்பாலை ரூ. 15.65 கோடியும் நிலுவைத்தொகை வைத்துள்ளன.
புதுச்சேரியில் உள்ள பல அரசு நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்கி ஊழியர்களுக்கு ஊதியம் தர முடியாத சூழல் உள்ளது.
தற்போது அரசு நிறுவன தொழிற்சாலைகளுக்கு பல கோடி கடனாக தந்து வாராக் கடனாக உள்ளது. தொடர்ந்தால் லாபத்தில் இயங்கும் பிப்டிக் நிறுவனமும் நஷ்டத்தில் இயங்கும் சூழல் ஏற்படும். தற்போது, புதுவை அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. கலால் வரி, சொத்து வரி, மின் கட்டண பாக்கி நிலுவை வைத்துள்ளோர் மீது வசூல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேபோல, பிப்டிக் நிறுவன வாராக் கடன்களை வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஆளுநர் அறிக்கை: இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி ஆளுநர் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சலில் வெளியிட்ட பதிவு: முறையற்ற வகையில் அரசு சார்பு நிறுவனங்களில் கடந்த காலங்களில் பணிவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் கணக்கு தணிக்கையே இல்லை. இதனால் நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இது பதிவாளர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்களால் நடத்தப்பட்டு வந்தது.
கடந்த காலங்களில் விதிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டுள்ளன. தொடர்ந்து தவறிழைப்பது சரியான வழிமுறை அல்ல. இது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ள சவால். கடந்த காலத்தில் நிகழ்ந்த தவறுகளை சரி செய்ய முதல்வர் உரிய முடிவு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் கிரண் பேடி.