புதுவை பல்கலைக்கழக பேராசிரியை சுபலட்சுமிக்கு தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தின் சிறந்த ஆராய்ச்சியாளருக்கான விருது கிடைத்துள்ளது.
புதுவை பல்கலைக்கழகத்தில் உயிரி வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையில் உதவிப் பேராசிரியையாக பணியாற்றி வருபவர் சுபலட்சுமி. இவரது ஆய்வுப் பணிகளை பாராட்டி ஹரியானா மாநிலம், மானேஸ்வரில் இயங்கி வரும் தேசிய மூளை ஆராய்ச்சி மையம், ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் அமைப்பின் சிறந்த ஆராய்ச்சியாளருக்கான விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
இந்த விருதானது மானேஸ்வர், தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தின் சார்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் அண்மையில் வழங்கப்பட்டது.
மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் துறைகளிடம் இருந்து நிதியுதவிகளைப் பெற்று பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் இவர், தற்போது விழித்திரையில் உள்ள நரம்பியல் குறைபாடுகளால் ஏற்படும் மனித குருட்டுத் தன்மைக்கான காரணங்கள் மற்றும் உணர்வுகளில் ஏற்படும் நரம்பியல் மாற்றங்கள், செல் சிகிச்சை ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இவரின் அரிய ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் நீரிழிவு நோய் காரணமாக ரெட்டினோபதி பாதிக்கப்பட்டவர்களை நோயில் இருந்து காப்பாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதைப் பெற்ற பேராசிரியை சுபலட்சுமி புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங்கை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வின்போது துறையின் பேராசிரியர்கள் பலர் உடனிருந்தனர்.