புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய இருந்ததாக, 4 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரியில் உள்ள மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் வெளிமாநில மாணவர்களை குறி வைத்தும், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்தும் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் முதலியார்பேட்டை வேல்ராம்பட்டு நகரில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து போலீஸார் வெள்ளிக்கிழமை மாலை அங்கு சென்று கஞ்சா விற்பனை செய்த நான்கு பேரை விரட்டிப் பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் வில்லியனூர் திருக்காஞ்சியைச் சேர்ந்த ரெளடி நித்தியானந்தம் (38), கோர்க்காட்டைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (23), முதலியார்பேட்டை இந்திரா நகரைச் சேர்ந்த சபரிநாதன் (25), கடலூர் கிளிஞ்சகுப்பத்தைச் சேர்ந்த ராஜாமணி (27) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 2 கிலோ 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், 4 மோட்டார் சைக்கிள்கள், 4 செல்லிடப்பேசிகள் மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவர்கள் நான்குபேரையும் போலீஸார் புதுச்சேரி நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பிவைத்தனர்.