மத்திய பாஜக அரசுக்கு எதிரான பிரசார பயணம் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
பெரியார் திராவிடர் கழகம் சார்பில், தமிழகம் மற்றும் புதுவையில் இந்த பிரசார பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன் தொடக்க நிகழ்ச்சி புதுச்சேரி பெரியார் சிலை அருகே நடைபெற்றது.பெரியார் திராவிடர் கழகத் தலைவர் வீர.மோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் இளங்கோ, செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரசார செயலாளர் சீனி.விடுதலையரசு சிறப்புரையாற்றி பிரசார பயணத்தை தொடக்கிவைத்தார்.
அவர் பேசுகையில், தமிழக மக்களின் மொழி உரிமை, நதிநீர் உரிமை, கல்வி உரிமை, வாழ்வாதார உரிமை என அனைத்து உரிமைகளையும் மத்திய பாஜக அரசு பறித்து வருகிறது.
எனவே, இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார பயணம் மேற்கொள்ளப்படுகிறது என்றார் விடுதலையரசு. கலை நிகழ்ச்சி, வீதி நாடகம், உரை ஆகியவை மூலம் தமிழகம் மற்றும் புதுவையில் செப். 20-ஆம் தேதி வரை இந்த பிரசார பயணம் நடைபெற உள்ளது.