திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தில் கரும்பில் பூச்சிநோய் தடுப்பு குறித்த பயிற்சி முகாம் திங்கள்கிழமை (செப். 26) நடைபெற உள்ளது.
இதுகுறித்து, திண்டிவனம் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஷீபா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கரும்புப் பயிரைத் தாக்கும் பூச்சிநோய்கள் குறித்தும், அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் அறிந்து கொள்வதும் அவசியமாகும். அப்போதுதான் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெற்று லாபத்தை ஈட்டமுடியும்.
இவற்றைக் கருத்தில் கொண்டு, வேளாண் அறிவியல் நிலையத்தில் கரும்புப் பயிரில் பூச்சி நோய் மேலாண்மை குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் திங்கள்கிழமை (செப். 26) நடைபெற உள்ளது.
இப்பயிற்சி முகாமில் முட்டை ஒட்டுண்ணியின் செயல்பாடு மற்றும் கட்டுப்படுத்தக் கூடிய பூச்சிகள், இனக் கவர்ச்சி பொறிகளின் பயன்பாடு பற்றிய செயல் விளக்கம் அளிக்கப்படும்.
விவசாயிகள் இதில் கலந்துகொண்டு கரும்புப் பயிரைத் தாக்கும் பூச்சிநோய்கள் குறித்த அடிப்படையான செய்திகளை அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்.