சங்கராபுரத்தில் வளர்ச்சிப் பணிகள் மற்றும்
தண்ணீர் பிரச்னை குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்காத 4 ஊராட்சிச் செயலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தண்ணீர்ப் பிரச்னை குறித்து சனிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட இயக்குநர் மகேந்திரன் தலைமை வகித்தார். கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள், அலுவலர்கள், ஊராட்சிச் செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வறட்சி காலத்தில் தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்தல், பி.எம்.ஏ.ஒய். தொகுப்பு வீடுகள் பணிகளை விரைவாக தொடங்குதல், தனி நபர் கழிவறைப் பணிகள் மற்றும் இதர திட்டப் பணிகளை விரைவாக முடித்திட மாவட்ட இயக்குநர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் பங்கேற்காத ஊராட்சிச் செயலர்கள் ஆரம்பூண்டி அண்ணாமலை, மணியார்பாளையம் ராமச்சந்திரன், இன்னாடு சக்திவேல், புதுபாலப்பட்டு ராஜவேல் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்ய திட்ட அலுவலர் அறிவுறுத்தியதின் பேரில், கல்வராயன்மலை வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார் அவர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.