கள்ளக்குறிச்சி அருகே சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 15 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட சிறுவங்கூர் ஊராட்சியில் உள்ளது ரோடுமாமாந்தூர் கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள சிறிய நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் பிடிக்கும் பெண்களிடம் அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (55) பிரச்னை செய்து வந்ததாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த முருகன் மனைவி செல்வி மற்றும்
13 பேர் சேர்ந்து கள்ளக்குறிச்சி-சங்கராபுரம் சாலையில் சனிக்கிழமை காலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து கள்ளக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் இரா.விஸ்வநாதன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.
மறியலால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியல் தொடர்பாக 15 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.