புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு லாரியில் கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்பிலான மதுப் புட்டிகளை கோட்டக்குப்பம் அருகே போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தை அடுத்த அனிச்சங்குப்பம் சோதனைச்சாவடியில் வெள்ளிக்கிழமை உதவி ஆய்வாளர் குணசேகர் தலைமையிலான போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக புதுச்சேரியிலிருந்து வந்த ஒரு லாரியை போலீஸார் சோதனை செய்தனர். அந்த லாரியில் 4,668 மதுப்புட்டிகள் இருந்தன.
லாரி ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில், அவர் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தைச் சேர்ந்த காசி மகன் முனியாண்டி (36) என்பதும், புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு மதுப்புட்டிகளை கடத்த முயன்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து, முனியாண்டியை போலீஸார் கைது செய்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள மதுப்புட்டிகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள லாரியையும் பறிமுதல் செய்து, கோட்டக்குப்பம் மது விலக்கு அமல்பிரிவு போலீஸில் ஒப்படைத்தனர்.
மது விலக்கு போலீஸார் வழக்குப் பதிந்து, மதுக் கடத்தலில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
விரைந்து நடவடிக்கை எடுத்த போலீஸாரை எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டினார்.