செஞ்சி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டாஸ்மாக் ஊழியரிடம் இருந்து ரூ. 45 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
செஞ்சி வட்டம், நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் முருகன் (43). இவர், பாலப்பாடி டாஸ்மாக் மதுக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கடையில் வசூலான ரூ. 45 ஆயிரத்து 300-ஐ எடுத்துக் கொண்டு தனது பைக்கில் முருகன் ஊருக்குச் சென்று கொண்டிருந்தாராம். ஜெகநாதபுரம் அருகே சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளை வந்தவர், தொடர்ந்து ஒலி எழுப்பி, முருகனை திசைத் திருப்பி கீழே விழ வைத்தாராம். அப்போது பின்னால் வந்தவர்கள் பணப் பையை எடுத்து சென்றுவிட்டதாக முருகன் நல்லாண்பிள்ளைபெற்றாள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.