விழுப்புரத்தில் பாஜக நகர செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
நகர பொதுச் செயலர் எம்.மகேஷ் வரவேற்றார். நகரத் தலைவர் எம்.பழனி தலைமை வகித்தார். மாவட்டப் பொதுச் செயலர் வி.சுகுமார், மாவட்டச் செயலர் துரை.சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் கே.ஆர். விநாயகம் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், வங்கிகளில் வழங்கப்படும் மத்திய அரசின் தொழில் கடன் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். காப்பீடு திட்டத்தின் பயன்களை விளக்க வேண்டும். துறை சார்ந்த மத்திய அரசின் திட்டங்களை கட்சி நிர்வாகிகள் மக்களிடம் விளக்கி பயன்பெறச் செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.
இதனையடுத்து, நகர பொருளாளர் எம்.மணிகண்டன் தீர்மானங்களை வாசித்தார். மத்திய அரசின் முத்ரா வங்கி கடன் உள்ளிட்ட திட்டங்களை பொது மக்கள் பயன்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் நகராட்சியில், டெங்கு காய்ச்சல் தடுப்புக்கான கொசு மருந்து அடிக்க வேண்டும். டெங்கு தடுப்பு மருந்துகளை மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும். விழுப்புரம் நகரில் குடிநீர், சாக்கடைப் பணிகளை செயல்படுத்தாத நகராட்சியைக் கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானங்களை நிறைவேற்றினர். நகர துணைத் தலைவர் எஸ்.சரவணன் நன்றி கூறினார்.