உலக நன்மை வேண்டி அவலூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோயிலில், 108 சங்காபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக சிவன், பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. கோயில் முன் மண்டபத்தில் 108 சங்குகளில் புனித நீர் ஊற்றி வரிசையாக வைக்கப்பட்டன. தொடர்ந்து, கணபதி பூஜை, கலச பூஜை, சங்குகளுக்கான பூஜை ஆகியவை நடைபெற்றன. யாக பூஜையும், சிவன், பார்வதி உள்ளிட்ட உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும் ஒரே நேரத்தில் நடைபெற்றன.
பூரணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்ற பிறகு உற்சவ மூர்த்திகளுக்கு சங்காபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சிவனடியார் குழு செய்திருந்தது.