உளுந்தூர்பேட்டை பட்டாலியன் குடியிருப்புப் பகுதியில் காவலரின் மனைவி புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உளுந்தூர்பேட்டை அருகே பாலியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை பட்டாலியன் மையம் உள்ளது. இங்கு காவலராக பணிபுரிபவர் ரவீந்திரன். இவரது மனைவி அபிராமி(25). இருஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு 5 மாத குழந்தை உள்ளது. ரவீந்திரன் குடும்பத்துடன் பட்டாலியனில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், புதன்கிழமை பகல் 12 மணி அளவில் வீட்டில் இருந்த ரவீந்திரன், குழந்தைக்கு பால் கொடுக்கவில்லை என்று மனைவியை திட்டினாராம். பின்னர், குழந்தையை தூக்கிக்கொண்டு, வெளியே சென்றுவிட்டு, பிற்பகல் 2 மணி அளவில் வீட்டுக்குத் திரும்பினாராம். அப்போது, வீட்டில் அபிராமி தூக்கில் தொங்கி
தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் அளித்த தகவலின்பேரில் எடைக்கல் போலீஸார் நிகழ்விடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.