விழுப்புரம் புறவழிச் சாலையில் புதன்கிழமை இரவு சிறிய ரக சரக்கு வாகனம் தீப் பற்றி எரிந்து சேதமடைந்தது.
விழுப்புரம் வண்டிமேட்டைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (37). ஓட்டுநரான இவர் தனது சிறிய ரக சரக்கு வாகனத்தில் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் பார்சல் சர்வீஸ் மையத்திலிருந்து, சரக்குகளை ஏற்றிக் கொண்டு புதன்கிழமை மாலை புறப்பட்டார்.
விழுப்புரத்தில் பல்வேறு இடங்களில் சரக்குகளை வழங்கி விட்டு இரவு 8 மணியளவில், ஜானகிபுரம் புறவழிச் சாலைப் பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது, திடீரென அந்த வாகனத்தின் முன்பகுதியில் தீப்பற்றியது.
இதையடுத்து, தீயை அணைக்கும் முயற்சியில் சுரேஷ்குமார் ஈடுபட்டார். ஆனால், தீ மளமளவென்று பற்றி எரியத் தொடங்கியது. உடனடியாக வாகனத்தின் பின்புறம் இருந்த சரக்குகளை சுரேஷ்குமார் கீழே இறக்கினார். சிறிது நேரத்தில் சாலையின் தடுப்புக் கட்டையில் மோதி சரக்கு வாகனம் நின்றது.
தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீசன், தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர்
தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.