விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கச்சிராபாளையத்தை அடுத்துள்ள மட்டிகைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் சந்தோஷ்குமார் (11). அங்குள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் புதன்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தார். பின்னர், விளையாட வெளியே சென்றவர், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரைத் தேடினர். சந்தோஷ்குமார் அதே பகுதியில் உள்ள ஆற்றுப் பகுதிக்குச் சென்றது தெரிய வந்தது.
ஆற்றில் சிறிதளவு தண்ணீர் சென்று கொண்டிருந்ததால், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த கள்ளக்குறிச்சி தீணைப்புப் படையினர் ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், மாணவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை தாகப்பாடி அம்மன் கோயில் அருகே ஆற்றில் சந்தோஷ்குமாரின் சடலம் மிதந்தது.
தகவலறிந்து அங்கு சென்ற போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கச்சிராப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.