புதுச்சேரியிலிருந்து கார், பைக்கில் மதுப் புட்டிகள் மற்றும் சாராயம் கடத்திய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகேயுள்ள சிறுவந்தாடு மதுவிலக்கு சோதனைச்சாவடியில் சனிக்கிழமை இரவு காவலர் சக்திவேல் தலைமையில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சொகுசுக் காரை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் 40 பாலித்தீன் பாக்கெட்டுகளில் தலா 10 லிட்டர் வீதம், 400 லிட்டர் புதுச்சேரி சாராயம் இருந்தது தெரிய வந்தது. காரை ஓட்டி வந்த நபரை பிடித்து போலீஸார் விசாரித்தனர்.
விசாரணையில் அவர், புதுச்சேரி மாநிலம் மடுகரையைச் சேர்ந்த பாலாஜி (28) என்பதும், புதுச்சேரியிலிருந்து விழுப்புரத்துக்கு சாராயம் கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து காரையும், சாராயத்தையும் பறிமுதல் செய்த போலீஸார், அவற்றை விழுப்புரம் மதுவிலக்கு போலீஸில் ஒப்படைத்தனர். இதுகுறித்து மதுவிலக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பைக்கில் மதுக் கடத்தல்: இதேபோல, சிறுவந்தாடு மதுவிலக்கு சோதனைச்சாவடி வழியாக சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் 200 புதுச்சேரி மதுப் புட்டிகளை கடத்தி வந்த 2 பேரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் விழுப்புரம் அருகேயுள்ள பேரங்கியூரைச் சேர்ந்த ராமச்சந்திரன், பைத்தாம்பாடியைச் சேர்ந்த பிரசாத் என்பதும், புதுச்சேரியிலிருந்து உளுந்தூர்பேட்டைக்கு மது கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து, அவர்களிடம் இருந்த மதுப் புட்டிகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, விழுப்புரம் மதுவிலக்கு போலீஸில் ஒப்படைத்தனர்.
மதுவிலக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.