கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் மருந்தாளர் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பி.சண்முகம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அ.அன்புதுரை முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்டச் செயலாளர் இ.மணிமாறன் சங்கச் செயல்பாடுகள் குறித்துப் பேசினார். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
கள்ளக்குறிச்சி சுகாதார மாவட்டத்தில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றம் பெற்றுள்ளதால் தலைமை மருந்தாளுநர் பணியிடம், மருந்தாளுநர் கூடுதலாக 5 பணியிடங்களை உருவாக்கிட வேண்டும். துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் கள்ளக்குறிச்சி அலுவலகத்தில் ஒரு தலைமை மருந்தாளுநர் பணியிடத்தை உருவாக்கிட வேண்டும். மருந்தாளர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் நோயாளர் நலச் சங்கத்தின் தணிக்கையின் பொருட்டு மருந்தாளுநர் அலைக்கழிக்கப் படுவதற்கு இம் மாவட்டப் பொதுக்குழு தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதலாக ஒரு மருந்தாளுநர் பணியிடமும், தலைமை மருந்தாளுநர் பணியிடமும் உருவாக்கப்பட வேண்டும்.
கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் பாலமுருகன், மாநில துணைத் தலைவர் செல்வமணி, அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் டி.ரவி, வட்டத் தலைவர் வி.சுந்தர்பாபு, மாநில துணைத் தலைவர் அன்பழகன் உள்ளிட்ட பலர் பேசினர். மாவட்டப் பொருளாளர் பி.ராஜேந்திரன் நன்றி கூறினார்.