திண்டிவனம் அருகே பைக்கில் சென்ற டாஸ்மாக் ஊழியர்களிடம் வசூல் பணம் ரூ.1.75 லட்சத்தை மர்மநபர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு பறித்துச் சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த ஆவணிப்பூரில் டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. இங்கு விற்பனையாளராக ஜெயக்குமார் (40), மேற்பார்வையாளராக பிரபாகரன் (41) பணிபுரிகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு இவர்கள், மதுக் கடையை மூடிய பிறகு, வசூல் பணத்தை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினர். பைக்கை ஜெயக்குமார் ஓட்டினார். அவருடன் பிரபாகரன் பணத்துடன் அமர்ந்து சென்றார்.
அன்னம்பாக்கம் பகுதியை கடந்தபோது, பைக்கில் பின் தொடர்ந்து வந்த 3 மர்ம நபர்கள், டாஸ்மாக் ஊழியர்களை வழிமறித்து மிரட்டி 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு தப்பினர். தகவலறிந்த திண்டிவனம் டிஎஸ்பி திருமால், விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
இச்சம்பவம் குறித்து ஒலக்கூர் போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.