பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீட்டு முறையைச் செயல்படுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியது.
விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆற்றலரசு தலைமை வகித்தார்.
மாவட்டப் பொருளாளர் பிரின்ஸ் சோமு, செய்தித் தொடர்பாளர் தமிழேந்தி, மாநில நிர்வாகிகள் சேரலாதன், கார்வேந்தன், வீரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன் சிறப்புரையாற்றினார்.
மாடுகளை விற்கவும், வாங்கவும் தடை விதித்த மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையைக் கண்டிப்பது, அரசு குவாரியில் லாரிகளில் மணல் எடுத்து வெளி மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் விற்பதைக் கண்டிப்பது எனவும், உள்ளூர் தேவைகளுக்காக, மாட்டு வண்டிகளில் மணல் வழங்க அனுமதிக்க வேண்டும்,
மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில், அறிவியல் பாடப் பிரிவு மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். வருகிற ஆக.17-இல் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாளை தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகரச் செயலர் சரவணன் நன்றி கூறினார்.