விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற திடீர் வாகனச் சோதனையில், விதிமீறல் 1,117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மாவட்டம் முழுவதும் 68 இடங்களில் திடீர் வாகனச் சோதனை மேற்கொள்ள போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
விழுப்புரம், கோலியனூர் பகுதிகளில் எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் வாகனச் சோதனை நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில், ஆவணங்கள் இல்லாதது, அதிவேகம் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறியதாக 1,117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும், 174 தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 113 குற்றவாளிகள், பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 117 குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன. இந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது 161 சந்தேக நபர்கள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், நிலுவையில் இருந்த நீதிமன்ற பிடியாணைகளில் தேடப்பட்டு வந்த 20 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும், மாவட்டத்தில் உள்ள வங்கிகள், பெட்ரோல் நிலையங்கள், நகைக் கடைகள், வணிக நிறுவனங்கள் உள்பட 1,339 இடங்களின் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.