பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் விழுப்புரத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருந்திட்ட வளாகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலத் துணைத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாநிலப் பொருளர் ஜெயகணேஷ் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் இளங்கோவன் வரவேற்றார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் சீனுவாசன், பல்வேறு சங்க நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, பழனி, ஜெயச்சந்திரன், சங்கரலிங்கம் சிவக்குமார், ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
தமிழக அரசின் கொள்கை முடிவின்படி இதுவரை 1,000 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மூடப்பட்ட கடைகளில் உள்ள பணியாளர்களுக்கு, டாஸ்மாக்கிலேயே பணி அளிக்கப்பட்டுள்ளதால் அவர்களிடையே குழப்பமும், போட்டியும் நிலவுகிறது. ஆகவே, அரசுத் துறைகளில் உள்ள நிரந்தர காலிப் பணியிடங்களை டாஸ்மாக் பணியாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடலூர் மாவட்டத் தலைவர் பழனிவேல் நன்றி கூறினார்.