விழுப்புரத்தில், ஷேர் ஆட்டோவில் சென்ற நீதிமன்ற பெண் ஊழியரிடம் ரூ.80 ஆயிரம் ரொக்கம் திருட்டுப் போனது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
கடலூர், திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்த சேஷாத்திரி மனைவி ஸ்ரீமதி. இவர், விழுப்புரம் நீதிமன்றத்தில் அலுவலராக பணியாற்றி வருகிறார். கடலூரிலிருந்து விழுப்புரத்துக்கு ரயிலில் வந்து செல்வார். புதன்கிழமை மாலை பணி முடிந்து, புதிய பேருந்து நிலையத்திலிருந்து விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு ஷேர் ஆட்டோவில் ஏறி பயணித்தார்.
சிக்னல் அருகே சென்றபோது ஆட்டோவுக்கு பணம் தருவதற்காக, பையை பார்த்தபோது கைப் பை மாயமானது தெரிய வந்தது.
அதில், ரூ.80 ஆயிரம் ரொக்கம், 5 ஏடிஎம் அட்டைகள், ரயில் மாதாந்திர பயணச்சீட்டு உள்ளிட்டவை இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்தவர்களிடம் விசாரித்தும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.