விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட பொக்லைன் இயந்திரம் உள்ளிட்ட
3 லாரிகளை கனிமவளத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றில் பல இடங்களில் விதிகளை மீறி லாரிகளில் மணல் திருட்டு நடப்பதாக தொடர் புகார்கள் வந்துள்ளன. இது குறித்து, நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் இல.சுப்பிரமணியன் உத்தரவிட்டிருந்தார்.
இதன்பேரில், விழுப்புரம் கனிமவளத் துறை துணை இயக்குநர் பெருமாள்ராஜா தலைமையிலான குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த வகையில், வெள்ளிக்கிழமை இரவு விழுப்புரம் அருகே பிடாகம் குச்சிப்பாளையம் பகுதி தென்பெண்ணை ஆற்றில், மணல் திருட்டு நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், துணை இயக்குநர் தலைமையிலான குழுவினர், போலீஸ் துணையுடன் சென்று, திடீர் சோதனையிட்டனர்.
அப்போது, ஆற்றில் பொக்லைன் இயந்திரம் மூலம் லாரிகளில் மணல் திருட்டு நடைபெறுவது தெரிந்தது. இக்குழுவினரைக் கண்டதும், அவர்கள் வாகனங்களிலிருந்து தப்பிவிட்டனர். இதனையடுத்து, மணல் ஏற்றிய ஒரு பொக்லைன் இயந்திரம், மூன்று டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்து, விழுப்புரம் வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தென்பெண்ணை ஆற்றில் அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து, விழுப்புரம் வட்டாட்சியர் பத்மா தலைமையிலான வருவாய்த் துறையினர் விசாரித்து வருகின்றனர்.