கள்ளக்குறிச்சியை அடுத்த அசகளத்தூர், மகரூர் காட்டுப் பகுதியில் வெங்காய வெடி வைத்து பன்றியைக் கொன்றதாக இரு இளைஞர்களை வனத் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த வரஞ்சரம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளான அசகளத்தூர், மகரூர் காட்டுப் பகுதியில் உளுந்தூர்பேட்டை வனச் சரகர் பெருமாள் உள்ளிட்ட வனத் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், பன்றியை ஏற்றிச் சென்றுள்ளனர். அவர்களை மடக்கி, வனத் துறையினர் விசாரித்தனர். விசாரணையில், கள்ளக்குறிச்சி நீலமங்கலம் நரிக்குறவர் பகுதியைச் சேர்ந்த மணி, மணிகண்டன் என்பதும், அவர்கள் இருவரும் பன்றியை வெங்காய வெடி வைத்துக் கொன்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த வனத் துறையினர், அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனம், பன்றியை பறிமுதல் செய்தனர்.