செஞ்சி அருகே மழைக்கு கோழிப்பண்ணையில் ஒதுங்கியபோது சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழந்தார். சிறுமி உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
செஞ்சி வட்டம், பள்ளிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலை (55). இவரது மனைவி மல்லிகா (35), மகள் கிருத்திகா (11), செல்வம் (7). இவர்கள் அனைவரும் புதன்கிழமை இரவு அதே கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணைக்கு சென்றுள்ளனர். இரவு 7 மணி அளவில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது.
மழைக்காக இவர்கள் நான்கு பேரும் கோழிப்பண்ணையின் சுவரோரம் ஒதுங்கி நின்றனர். அப்போது திடீரென சுவர் இடிந்து விழுந்தது. இதில் சிறுவன் செல்வம் அதே இடத்தில் இறந்தார். மற்ற மூவரும் காயமடைந்தனர். அவர்கள் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து செஞ்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.