விழுப்புரம் மாவட்டத்தில் மதுக் கடத்தலைத் தடுக்க 189 போலீஸாரை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் தலைமைக் காவலர் முருகன் திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவுக்கும், சின்னசேலம் தலைமை காவலர் வினய்ஆனந்த் திருக்கோவிலூர் மதுவிலக்கு அமல்பிரிவுக்கும், செஞ்சி தலைமை காவலர் சுதாகர் விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவுக்கும், வானூர் தலைமை காவலர் ஞானப்பிரகாசம் செஞ்சி மதுவிலக்கு அமல்பிரிவுக்கும், விழுப்புரம் மேற்கு தலைமைக் காவலர் ஜெயச்சந்திரன் செஞ்சி மதுவிலக்கு அமல்பிரிவுக்கும் மாற்றப்பட்டனர்.
இதேபோல, மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த மொத்த 109 போலீஸார் மாவட்டத்தின் வெவ்வேறு மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்து எஸ்பி ஜெயக்குமார் வியாழக்கிழமை இரவு உத்தரவிட்டார்.
மது விலக்கு போலீஸார் இடமாற்றம்: இதேபோல மதுவிலக்கு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 82 போலீஸார் காவல் நிலையங்களுக்கு மாற்றி வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டது.
விழுப்புரம் மதுவிலக்குப் பிரிவு தலைமைக் காவலர் ஜோசப் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்துக்கும், தலைமைக் காவலர் சரவணன் விக்கிரவாண்டி காவல் நிலையத்துக்கும், திண்டிவனம் மதுவிலக்குப் பிரிவு தலைமைக் காவலர் பாலமுருகன் கிளியனூர் காவல் நிலையத்துக்கும், திருக்கோவிலூர் மதுவிலக்குப் பிரிவு தலைமைக் காவலர் தேவநாதன் வளனூருக்கும், கோட்டக்குப்பம் மதுவிலக்குப் பதிவு தலைமைக் காவலர் லட்சுமிநாராயணன் மயிலம் காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டனர்.