கள்ளக்குறிச்சியில் நீண்டகால நெரிசல் நிலையை தடுக்க புதிய பேருந்து நிலையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தீபா பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக சின்னசேலம் வட்டம், வடக்கனந்தலைச் சேர்ந்த தீபா பேரவை மாவட்டச் செயலாளர் ஆர்.பொன்மலை தலைமையில் வந்த பேரவையினர், திங்கள்கிழமை விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலை, வரத்து வாய்க்கால்களை சீர்படுத்த வேண்டும். கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். நீண்டகால நெரிசல் நிலையைப் போக்க கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி தலைமை மருத்துவமனை கட்டடங்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கான அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள காடுகள் மற்றும் மலைப் பகுதிகளில் வன விலங்குகள் தண்ணீர் குடிக்க வசதியாக தண்ணீர் தொட்டிகள், மின் மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பும் வகையில் அமைத்துத் தர வேண்டும். கல்வராயன்மலைப் பகுதியில் சாராய உற்பத்தியை தடுக்க வேண்டும். கச்சிராயப்பாளையம் வாரச் சந்தைக்கு மேற்கூரையுடன் கூடிய கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.