கிளியனூர் அருகே சேறும் சகதியுமான சாலையை சீரமைக்கக் கோரி, கிராம மக்கள் திங்கள்கிழமை சாலையில் நாற்று நடும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வானூர் வட்டம், கிளியனூர் அருகே உள்ள பழைய கொஞ்சிமங்கலம் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்தக் கிராமத்துக்குச் செல்லும் தார்ச்சாலை குண்டும், குழியுமாகிப் போனதால், சாலையை சீரமைக்க வலியுறுத்தி, அக்கிராம மக்கள், பாஜக நிர்வாகிகள் சிவக்குமார், காத்தவராயன், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தலைமையில்,
திங்கள்கிழமை திரண்டு வந்து, சேறும் சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: பழைய கொஞ்சிமங்கலம் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்ச்சாலை சேதமடைந்து காணப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால், மழை நீர் தேங்கி, சேறும், சகதியுமாக உள்ளது. குண்டும், குழியுமான சாலையில் தேங்கியுள்ள நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது. அவசரகால ஊர்திகள், வாகனங்கள் எளிதில் சென்றுவர முடியாத நிலை நீடிக்கிறது. மேலும், கிராமத்தில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. இது குறித்து, வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் பலனில்லை என்றனர். தகவல் அறிந்து வந்த கிளியனூர் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து, வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.