திண்டிவனத்தில் பேருந்தில் விவசாயியிடம் ரூ.2 லட்சம் திருடியதாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திண்டிவனம், கோபாலபுரம், மன்னார்சாமி கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ராமன்(37). விவசாயி. இவர், தனது அக்கா மகள் திருமணத்துக்கு நகை வாங்க, தனது குடும்பத்துடன் புதுச்சேரிக்கு செல்ல திங்கள்கிழமை காலை திண்டிவனம் பேருந்து நிலையத்துக்கு வந்தார். அவர்கள் காலை 10.30 மணியளவில் பேருந்தில் ஏறி அமர்ந்தனர்.
அப்போது, ராமன் சற்று நேரம் கழித்து பேண்ட் பாக்கெட்டை பார்த்தபோது, பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தைக் காணவில்லையாம். அப்போது, பேருந்தில் இருந்து 4 பேர் குதித்து ஓடினர்.
இது குறித்து, திண்டிவனம் போலீஸில் ராமன் புகார் செய்தார். போலீஸார் கிட்டங்கல் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அந்த சிறுவன், கிட்டங்கல் பகுதியைச் சேர்ந்த சரவணன், ரஜனி(35) ஆகியோருடன் சேர்ந்து, ராமனிடம் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, சரவணனை பிடித்து போலீஸார் விசாரித்தனர். அதில், அவர் வீட்டில் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை போலீஸார் கைப்பற்றினர்.
பின்னர், அதில் தொடர்புடைய ரஜனி மற்றும் 15 வயது சிறுவனை போலீஸார் கைது செய்தனர்.