விழுப்புரத்தில் தனியார் நிதி நிறுவனம் பணத்தை தராமல் மோசடி செய்ததாக, 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் செய்தனர்.
விழுப்புரம், கே.கே. சாலையில் பிரபல தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தவணை முறையில் ஏலச் சீட்டு கட்டினர். சீட்டு எடுக்கப்பட்டும் உரியவர்களுக்கு பணத்தை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பல முறை கேட்டும், பணத்தை வழங்காமலும், முறையான பதில் சொல்லாமலும் நிதி நிறுவனப் பணியாளர்கள் இருந்தனராம்.
இதனால், ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் அந்த நிதி நிறுவனத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து, விழுப்புரம் மேற்கு போலீஸார், பணியாளர்களை மீட்டு, வாடிக்கையாளர்களை அப்புறப்படுத்தினர். இதன்பிறகு, அந்த நிறுவனம் பூட்டப்
பட்டது. இதனிடையே, நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி பாதிக்கப்பட்ட கே.கே.சாலை மணி நகரைச் சேர்ந்த காளிதாஸ் உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் விழுப்புரம் மாவட்ட காவல் தலைமையகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்
தனர். இதுவரை அந்த நிறுவனம் மீது 80-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. வாடிக்கையாளர்களுக்கு நிதி நிறுவனம் ரூ.90 லட்சம் வரை தர வேண்டியுள்ளது.
அதனை, வாடிக்கையாளர்களுக்கு வழங்க நிதி நிறுவனம் கால அவகாசம் கேட்டுள்ளது. அதனால், அந்த நிறுவனத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளதாக விழுப்புரம் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.