குடிநீர் பிரச்னை: கிராம மக்கள் சாலை மறியல்
கள்ளக்குறிச்சி அருகே சேதமடைந்த மின்மாற்றியால் மின்சாரம் இன்றி குடிநீருக்கு திண்டாடிய கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்டது சிறுவங்கூர் ஊராட்சி. இங்கு 9 வார்டுகள் உள்ளன. அதில் 3-வது வார்டுக்கான 1,5,6 வார்டுகள் இணைப்பு கிராமமான ரோடுமாமாந்தூரில் 600க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
செவ்வாய்க்கிழமை இரவு மின்னல் தாக்கியதில் அங்கிருந்த மின்மாற்றி பழுதடைந்து விட்டதாம். இதனால் அக் கிராமத்தில் உள்ள 5,6 வார்டுகளில் மின்சாரம் தடைபட்டுவிட்டதாம். இரு நாள்களாக மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர்.
மின்சார அலுவலத்தில் தொடர்பு கொண்டு மாற்று மின்மாற்றியில் இருந்து இணைப்பினை மாற்றி கொடுக்குமாறு கேட்டனராம். அதிகாரிகள் அதனை கண்டு கொள்ளவில்லையாம். இதனால் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு இருளில் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள் வியாழக்கிழமை பிற்பகல் காலிக் குடங்களுடன் கள்ளக்குறிச்சி-சங்கராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் த.விஜயகுமார், உதவி ஆய்வாளர் த.நரசிம்மஜோதி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஆதிநாராயணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, போலீஸார் மின்வாரிய அலுவலர்களை தொடர்பு கொண்டு மின்சாரம் கிடைக்க மாற்று ஏற்பாடு செய்தனர். இதையடுத்து, கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.