திருக்கோவிலூரில் அனுமதியின்றி வீட்டில் வைத்திருந்த பட்டாசுப் பெட்டிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
திருக்கோவிலூரில் நகரில், சார்-ஆட்சியர் சாருஸ்ரீ, அனுமதியின்றி பட்டாசுப் பெட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதைத் தடுக்கும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டார்.
அப்போது, திருக்கோவிலூர் கெங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முத்துக்குமரன் மகன் முரளி, அனுமதியின்றி தனது வீட்டில் 30 பட்டாசுப் பெட்டிகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பட்டாசுப் பெட்டிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. சார்-ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பழனி, வருவாய் வட்டாட்சியர் ஏ.நளினி, வருவாய் ஆய்வாளர் புருஷோத்தமன், கிராம நிர்வாக அலுவலர் ஜெகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.