செஞ்சி அருகே பள்ளித் தாளாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
செஞ்சி அருகே கடலி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி(85). இவர், அதே பகுதியில் தொடக்கப் பள்ளி நடத்தி வந்தார். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த அவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். தகவல் அறிந்த வளத்தி போலீஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
பின்னர், எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடி வந்தனர்.
விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த இனியாஸ் மகன் ராஜா(27) என்பவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அவரை தனிப்படை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், திருமணமான ராஜா வேறு ஒரு பெண்ணை அழைத்து வந்ததை சின்னசாமி பார்த்துவிட்டாராம். இதனை வீட்டில் சொல்லிவிடுவார் என்ற பயத்தில் அவரை ராஜா கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்ததாம். இதையடுத்து, வியாழக்கிழமை ராஜாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.