தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி, மரக்காணம் ஆஞ்சநேயர் கோயிலில் லட்ச தீப விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
மரக்காணம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள சாந்த சொரூப ஆஞ்சநேயர் கோயிலில் 26-ஆம் ஆண்டு லட்ச தீப விழாவையொட்டி காலையிலேயே நடை திறக்கப்பட்டு, ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றன.
தொடர்ந்து, மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வடை மாலை, துளசி மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு யாகங்கள் நடைபெற்றன.
முக்கிய நிகழ்ச்சியான லட்ச தீப விழா இரவு 7 மணி அளவில் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர். இந்த விளக்குகளால் கோயில் வளாகம் முழுவதும் ஒளிவெள்ளத்தில் ஜொலித்தது.