விழுப்புரத்தில் செவிலியர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த பண்ருட்டியைச் சேர்ந்த செவிலியர் மணிமாலா அண்மையில் தற்கொலை செய்துகொண்டார்.
அரசு மருத்துவர்கள், அதிகாரிகள் நெருக்கடி மற்றும் பணிச்சுமை காரணமாக மணிமாலா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, பல்வேறு மாவட்டங்களில் செவிலியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரத்தில் சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை செவிலியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஒருங்கிணைப்பாளர் பரசுராமன் தலைமை வகித்தார். அரசு ஊழியர்கள் சங்க இணைச் செயலர் ஆசோகன், வட்டத் தலைவர் நாகராஜன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
செவிலியர் மணிமாலா இறப்புக்கு உரிய நீதி வழங்க வேண்டும், அவரது தற்கொலைக்கு காரணமான இரண்டு பெண் மருத்துவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், செவிலியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.