விழுப்புரத்தில் இளம் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பயிற்சி அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் ச.நீலாம்பாள் தலைமை வகித்தார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதிவாணன், மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செஞ்சிலுவைச் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாபுசெல்வதுரை வரவேற்றார்.
முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி பங்கேற்று, செஞ்சிலுவைச் சங்க ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்(படம்). அவர் பேசியதாவது:
செஞ்சிலுவைச் சங்க மாணவர்களிடம் மனித நேயம், நடுநிலை, பாரபட்சமின்மை, உலகளாவியத்தன்மை, ஒருமைப்பாடு, சேவைப்பணிகள் வளர ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். மாநில மற்றும் தேசிய அளவில் சாதிக்கக் கூடிய இளம் செஞ்சிலுவை மாணவர்களை உருவாக்க வேண்டும். செஞ்சிலுவை மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் பெற மேலும் சிறப்பாக ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என்றார்.
விழாவில், இளம் செஞ்சிலுவைச் சங்க இணை ஒருங்கிணைப்பாளர்கள் எட்வர்ட்தங்கராஜ், தமிழழகன், மேரிஸ்டெல்லா, சந்தியா, ஹேமலதா, பாஸ்கரன், ரவீந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.