நேரு இளையோர் மையம் சார்பில் இளம் தலைவர்கள் முன்னேற்றத் திட்டத்தில் சிறப்பாக கிராமச் சேவையாற்றும் குழுவினருக்கு ரூ.8ஆயிரம் பரிசு வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து நேரு இளையோர் மைய ஒருங்கிணைப்பாளர் மா.ஹெலன்ராணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில், நேரு இளையோர் மையம் சார்பில் பிரதமரின் இளம் தலைவர்கள் முன்னேற்றத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் குழுவினருக்கு பரிசு வழங்கப்படுகிறது.
தன்னார்வமுள்ள தூய்மைப் பணி செய்யும் நேரு இளையோர் மையத்துடன் இணைந்து சமூக சேவைப்பணியில் ஈடுபட்டு வரும் இளைஞர், மகளிர் மன்றங்கள் தங்கள் மன்றங்களிலேயே ஒரு குழு அமைத்து, தங்கள் கிராமங்களுக்கு தேவைப்படும் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய திறன் படைத்தவர்களாக இருக்க வேண்டும்.
இதன்படி கிராமத்தில் மரக்கன்று நடுதல், தரிசு நிலங்களை பயனுள்ளதாக மாற்றுதல், நெகிழிப்பைகளை அகற்றுதல், பள்ளிகள், அரசுக் கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள் இதர பொதுக் கட்டடங்களை சுத்தம் செய்தல், வர்ணம் பூசுதல், சேதமடைந்த பகுதிகளை சீர்படுத்ததுல், குளங்களை ஆழப்படுத்ததுல், கால்வாய் சீரமைத்தல், விளையாட்டு மைதானங்களை அமைத்தல் போன்ற பணிகளை ஒவ்வொரு குழுவினரும் குறைந்தது 100 மணி நேரம் வரும் பிப்.25-ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும்.
இந்தத் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றும் இளைஞர் மன்றத்துக்கு, ஒன்றிய அளவில் 2 இளைஞர் மன்றங்களுக்கு முதல் பரிசாக ரூ.8,000 மும், இரண்டாம் பரிசாக ரூ.4,000-மும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
சிறப்பாக 100 மணி நேரம் பணியாற்றும் அனைத்துக் குழுவினருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
இளைஞர் மன்றத்தினர் தாங்கள் பணிகள் மேற்கொண்ட விவரங்களை உரிய ஆதாரங்களுடன் நேரு இளையோர்மைய அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று நிறைவு செய்து வரும் பிப்.28-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இது தொடர்பாக, நேரு இளையோர் மைய அலுவலகத்தை தொடர்புகொண்டு தகவல் பெறலாம் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.