கள்ளக்குறிச்சி பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்களை திருடிய சிறுவனை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் கொளஞ்சிநாதன் மற்றும் போலீஸார் வியாழக்கிழமை நேப்ஹால் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள தனியார் மருத்துவமனை முன் மோட்டார் சைக்கிள்கள் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர் போலீஸாரைக் கண்டதும் பதுங்க ஆரம்பித்தார். அவரை போலீஸார் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில், அந்த இளைஞர் கள்ளக்குறிச்சி ராஜாம்மாள் நகரைச் சேர்ந்த சுமார் 18 வயது இளைஞர் என்பது தெரிய வந்தது. அவர் கடந்த 13ஆம் தேதி கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும், கடந்த16ஆம் தேதி சுந்தர விநாயகர் சாலையில் உள்ள தனியார் மருத்துவ மனையின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து கடலூர் இளஞ்சிறார் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனர். இரு மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.