பொது மக்களுக்கான நலத் திட்ட உதவித் தொகைகள் பிரச்னையின்றி அவர்களது வங்கிக் கணக்கில் சேருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
விழுப்புரம் மாவட்ட கருவூலம் மற்றும் கணக்குத் துறை சார்பாக பொதுமக்களுக்கு அளிக்கப்படும் நலத்திட்ட உதவித் தொகைகள் சரியாகச் சென்று சேருவது குறித்து, அனைத்து பணம் பெற்றளிக்கும் அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்துப் பேசியதாவது: கருவூலம் வழியாக பொது மக்களுக்கு அளிக்கப்படும் நலத்திட்ட உதவித் தொகைகள், பொதுமக்களால் அளிக்கப்படும் சில தவறான வங்கிக் கணக்கு எண்களாலும், நடப்பில் இல்லாத வங்கிக் கணக்குகளாலும் சிலருக்கு சென்றடையாமல் திரும்ப கருவூலத்துக்கே வந்துவிடுகிறது.
இந்தத் தொகைகளை உடனடியாக பயனாளிகளுக்கு சென்றடைய, பயனாளிகளிடம் இருந்து சரியான வங்கிக் கணக்கைப் பெற்று இம்மாத இறுதிக்குள் (ஜன.31) அனைத்து நிலுவைத் தொகைகளையும், நலத் திட்ட உதவிகளையும் வழங்கி அலுவலர்கள் தீர்வு காண வேண்டும்.
அனைத்துத் துறை சார்ந்த நலத் திட்ட உதவிகளை அளிப்பதற்கு, பயனாளியிடம் வங்கிக் கணக்கு விவரங்களை பெறும்போதே குறைகள் இல்லாத வகையில் ஆய்வு செய்தும், பயனாளியின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண், பான் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
இதன் பிறகே, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் மற்றும் நடப்பு மாதத்தின் கடைசி நடவடிக்கையின் பதிவு செய்யப்பட்ட பக்கத்தின் நகலைப் பெற்று, நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும், கருவூலத்துக்கு அனுப்பும் இசிஎஸ் படிவங்கள், சிடி பதிவேற்றங்கள் எவ்வித குறைபாடுமின்றி முழுமையாக தயார் செய்யப்பட வேண்டும். ஒரு முறை திருப்பப்பட்ட கணக்கு எண்ணுக்கு மறு மாதத்திலும் தொடர்ந்து தொகை அனுப்புவது, பயனாளியின் இருப்பை உறுதி செய்து கொள்வது ஆகியவற்றிலும் தனி கவனம் செலுத்த வேண்டும். கீழ்நிலை ஊழியர்களுக்கும் இதுகுறித்து அறிவுரை வழங்கி, இனி எந்த ஒரு பயனாளிக்கும் தொகை திரும்பாமல் இருப்பதற்கும், வங்கி விவரங்களை பயனாளிகளுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட கருவூல அலுவலர் சீனிவாசன், சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் கி.ரஞ்சனி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.