விழுப்புரத்தில் மாவட்ட புதிய அலை மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் பெருமாள் தலைமை வகித்தார்.
பொதுச் செயலர் அண்ணாமலை, துணை செயலர்கள் மாரிமுத்து, பாலகிருஷ்ணன், ஒன்றியச் செயலர் கோபால கிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் தமிழரசி வரவேற்றார்.
ஏராளமான மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு, அலுவலகத்தின் வாயில் பகுதியில் புதுப்பானையில் பொங்கலிட்டு வழிபட்டு, தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர். விழுப்புரம், திருக்கோவிலூர், மரக்காணம், கண்டமங்கலம் பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏழை மாற்றுத் திறனாளிகளுக்கு, கூட்டமைப்பு சார்பில் தலா 5 கிலோ பச்சரிசி, கரும்பு, ஏலம், முந்திரி திராட்சை ஆகிய பொங்கல் பொருள்களை இலவசமாக வழங்கினர். மாற்றுத் திறனாளிகள் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 80 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கும் பொங்கல் வாழ்த்துகளை கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.