விழுப்புரம், மரக்காணத்தில் இரு விவசாயிகளின் புகுந்து 22 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
விழுப்புரம், கமலா கண்ணப்பன் நகர், வேலுப்பிள்ளைத் தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (61), விவசாயி. இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டை பூட்டிக்கொண்டு, மனைவியுடன் சென்னையில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்றார்.
வெள்ளிக்கிழமை அதிகாலை இவரது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டுள்ளதாக பக்கத்து வீட்டினர், ராமமூர்த்திக்கும், மேற்கு போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீஸார் சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு சுமார் 18 பவுன் நகைகள் திருடு போயிருந்தது. இதுகுறித்து மேற்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.
மரக்காணத்தில்...: மரக்காணம் அருகே ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(48). விவசாயி. இவர், வியாழக்கிழமை மாலை வீட்டைப் பூட்டி சாவியை ஜன்னலில் வைத்து விட்டு, வெளியே சென்றார். இரவு 7 மணி அளவில் திரும்பியபோது, வீடு திறக்கப்பட்டு பீரோவிலிருந்த 4 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது. மரக்காணம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.