கள்ளக்குறிச்சியை அடுத்த அகரகோட்டாலத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 480 மதுப் புட்டிகளை போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த அகரகோட்டாலத்தில் வீட்டில் மதுப் புட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் த.விஜயகுமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளர் பு.மாணிக்கராஜா, காவலர்கள் ராஜ்குமார் மற்றும் போலீஸார் அகரகோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் சேகரின் (37) வீட்டுக்குச் சென்று சோதனையிட்டனர். அப்போது, அவர் வீட்டில் 480 புதுச்சேரி மாநில மதுப் புட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மதுப் புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸார், சேகர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.