விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக அம்மா அணி (தினகரன் அணி) புதிய ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மடப்பட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், முகையூர் ஒன்றியச் செயலருமான சேவல் கோதண்டராமன் தலைமை வகித்தார். திருநாவலூர் ஒன்றியச் செயலர் கே.ஜி.பி.ராஜாமணி வரவேற்றார்.
மாவட்ட இளைஞரணிச் செயலர் வஜ்ஜிரவேல், மாணவரணிச் செயலர் உதயகுமார், மாவட்ட இலக்கிய அணிச் செயலர் எரியீட்டி ஏழுமலை, திருவெண்ணெய்நல்லூர் நகரச் செயலர் சோலையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட அம்மா அணி செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஜி.பி.ஞானமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் ஆர்.கே.நகர் தேர்தலில் கழகத் துணைப் பொதுச் செயலர் தினகரனை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த ஆர்.கே.நகர் மக்களுக்கும், வெற்றிக்குப் பாடுபட்ட கழக நிர்வாகிகளுக்கும் விழுப்புரம் தெற்கு மாவட்ட அம்மா அணி சார்பில் நன்றி தெரிவித்தல், எம்.ஜி.ஆரின் 101-ஆவது பிறந்த நாள் விழாவில் ஒன்றிய, நகர, கிளைக் கழகங்களில் அவரின் உருவ சிலை, படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், திருவெண்ணெய்நல்லூர், தியாகதுருகம் உள்பட விழுப்புரம் தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். உளுந்தூர்பேட்டை ஒன்றியச் செயலர் கேசவன் நன்றி கூறினார்.