விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரசாரக் குழு மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்து புதன்கிழமை பல இடங்களில் பிரசாரம் மேற்கொண்டது.
திருச்சியில் நடைபெற உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டையொட்டி, மத்திய, மாநில மக்கள் விரோத செயல்களை மக்களிடம் பரப்புரை செய்ய, 6 வழித்தடங்களில் பிரசாரக் குழுக்கள், கடந்த 8-ஆம் தேதி பிரசாரப் பயணத்தை தொடங்கின.
இதில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் புறப்பட்ட இந்த பிரசாரப் பயணக்குழு, திருவண்ணாமலை மாவட்டம் வழியாக புதன்கிழமை விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்தது. அவலூர்பேட்டையில், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பரமணியன் தலைமையில் அந்த குழுவுக்கு செங்கொடி வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து பயணக்குழுவின் பிரசாரக் கூட்டம் மேல்மலையனூர் வட்ட செயலாளர் டி.முருகன் தலைமையில் நடைபெற்றது. கிளை செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.
இதையடுத்து, வளத்தியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்துக்கு வட்டக்குழு உதயக்குமார் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் வெங்கடபதி வரவேற்றார். திண்டிவனத்தில் வட்டச் செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் கோவிந்தன் வரவேற்றார். அதேபோல கூட்டேரிபட்டில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் கலைச்செல்வனும் விக்கிரவாண்டியில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணராஜூம் தலைமை தாங்கினர்.
தொடர்ந்து, விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற பிரசாரக் குழுக் கூட்டத்துக்கு வட்டச் செயலாளர் கண்ணப்பன் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் கே.குப்புசாமி வரவேற்றார்.
பிரசாரக் குழுக் கூட்டத்தை மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்திரராஜன் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர்கள் ப.செல்வசிங், வா.பிரமிளா ஆகியோர் பங்கேற்று, மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை விளக்கிப் பேசினர்.
வட சென்னை மாவட்ட எஸ்.ராமகிருஷ்ணன், தென் சென்னை மாவட்ட செயலர் ஜி.செல்வா, காஞ்சி மாவட்ட ச் செயலர் இ.முத்துகுமார், செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், முத்துகுமரன், சங்கரன், மூர்த்தி, கே.கலியன், கோதண்டம், அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.