கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தினர் விழுப்புரத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டத் தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். வட்ட செயலர் ஜெயராமன் வரவேற்றார். மாவட்டச் செயலர் புஷ்பகாந்தன் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான மாவட்ட பணி மாறுதல் ஆணையை நிறைவேற்ற வேண்டும். இணையதள அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். கூடுதல் கிராமங்களை கவனிக்கும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும்.
உள்பிரிவு பட்டா மாறுதலுக்கு உரிய கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரையைக் கட்டாயமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்ட இணைச் செயலர் உமாபதி, அமைப்புச் செயலர் முத்திரைவேல், மகளிரணிச் செயலர் மீனாட்சி, வட்ட துணைத் தலைவர் சுமதி, செந்தமிழ்செல்வன், ராஜிவ், முத்துக்கிருஷ்ணன், பாரதிதாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல, மாவட்டத்தில் உள்ள 13 வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பும், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.