திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வெளிச்சம் சமூக அறக்கட்டளை, மாவட்ட பார்வை இழப்புத் தடுப்புச் சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து முகாமை நடத்தின. முகாமுக்கு, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பி.திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தார். அறக்கட்டளைத் தலைவர் கே.முருகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் முகாமைத் தொடக்கி வைத்தார்.
வருவாய் வட்டாட்சியர் பி.செல்வராஜ், தலைமை ஆசிரியர்கள் எஸ்.ராஜா, ஏ.லூர்துசாமி, என்.ராமர், எம்.ரவி ஆகியோர் கண் பரிசோதனை செய்து கொள்வதன் அவசியம் குறித்துப் பேசினர். முகாமில், அரவிந்த் கண் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் 400-க்கும் மேற்பட்ட மக்களுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டனர். அதில், 100-க்கும் மேற்பட்டோர் கண் அறுவைச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். வழக்குரைஞர்கள் எம்.ரங்கநாதன், மீனாட்சி, பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் குமரவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆசிரியர் கே.ராமமூர்த்தி நன்றி கூறினார்.