வானூர் அருகே லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக விழுப்புரம் மணல் கடத்தல் தடுப்புப் படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மணல் கடத்தல் தடுப்பு டி.எஸ்.பி. வீமராஜ் தலைமையிலான போலீஸார் சனிக்கிழமை இரவு அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, வானூர் அருகே ஆகாசாம்பட்டு என்ற இடத்தில், அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 3 லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விக்கிரவாண்டி அருகே முட்ராம்பட்டைச் சேர்ந்த செந்தில்முருகன்(34), வழுதாவூரை சேர்ந்த சுரேஷ்(30), பக்கிரிப்பாளையத்தைச் சேர்ந்த வசந்தராஜா(30), பிரகாஷ்(33) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தப்பிச்சென்ற மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.